நீங்கள் நன்மையிலும்,இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்- உலகப்பொதுமறை - திருக்குர்ஆன்.
வெற்றி என்பது உன்னை உலகத்திற்கு அறிமுகம் செய்வது.... தோல்வி என்பது உன்னை உனக்கே அறிமுகம் செய்வது !!!

Website Translator

Saturday, February 4, 2012

ஏரோபிளேன் ஏற வைத்த எருமை வளர்ப்பு!



மேலே


பால்பண்ணை, பால்மாடு என்றாலே கலப்பினப் பசுக்கள் தான் நினைவிற்கு வரும். வெளிநாடுகளைச் சேர்ந்த ஜெர்சி, சிந்து, ஃபிரீசிஸியன் போன்ற கலப்பின மாடுகள் அதற்குக் காரணம். இரத வகையான மாடுகளுக்கு அதிகப் பராமரிப்புத் தேவைப்பட்டாலும், ஒரு எருமை சாப்பிடும் தீவனத்தைவிடக் குறைவாகச் சாப்பிட்டு ஐந்து எருமை கொடுக்கும் அளவுக்கு அதிக பால் கொடுக்கும் என்பதுதான்.
இது போன்ற காரணங்களால் நாட்டுப் பசு மற்றும் எருமை போன்றவற்றின் வளர்ப்பு குறைந்து கொண்டே இருக்கிறது என்றாலும், தயிர், தேநீர், போன்ற உபயோகங்களுக்குப் பலராலும் இன்றளவும் எருமைப் பால் விரும்பப்படுகிறது. எருமை, குறைவாகப் பால் கொடுத்தாலும் அதிலிருக்கும் கொழுப்புச் சத்தின் அளவு மிகவும் அதிகம் என்பதும் அந்தப் பால் விரும்பப்படுவதற்கு ஒரு காரணம். பல கிராமங்களில் எருமை வளர்ப்பு ஓரளவுக்கு நடந்து கொண்டு தான் இருக்கிறது. அது போல் ‘எருமை வளர்க்கும்’ கிராமங்களில் ஒன்று தான் தேனி மாவட்டம், சங்கராபுரம் அருகில் இருக்கும் வடமலைராஜபுரம். 

எருமை வளர்ப்பில் கரை கண்ட இந்த ஊர்க்காரர்களில் ஒருவரான கருப்பையா, அதைப் பற்றி கருப்பையா கூறுகிறார். நான் படிக்கலை, அதனால் எனக்கு எந்த வேலையும் கிடைக்கலை. இருந்த தோட்டத்தில் கொஞ்சம் விவசாயத்தைப் பார்த்துக்கிட்டே விவசாயக் கூலி வேலையையும் செய்து கொண்டிருந்தேன். அப்போதெல்லாம் கிராமங்களில் எல்லா வீடுகளிலும் பாலுக்காக எருமை மாடு வளர்ப்பார்கள். அதனால் நானும் ஒரு எருமை வாங்கலாம் என்று ஆசைப்பட்டேன். 83 – ம் வருடம் முன்னூறு ரூபாய்க்கு ஒரு எருமைக் கன்று வாங்கினேன். இப்பொழுது என்னிடம் இருக்கின்ற எருமைகள் எல்லாம் அதனுடைய வாரிசுகள் தான்.

இப்பொழுது மொத்தம் எட்டு ஈத்துவழி எருமைகள், ஏழு கிடேரிகள், ஒரு பொலிகாளை வைத்திருக்கிறேன். ஒரேயொரு எருமைக் கன்றுக்குட்டியில் தான் என்னுடைய வாழ்க்கை மேலே உயர ஆரம்பித்தது. வீடுகட்டி, பிள்ளைகளைப் படிக்க வைத்து வெளிநாட்டு வேலைக்கு அனுப்பினேன்.
மேய்ச்சல் நிலம்.. தண்ணீர் அவசியம்!

“எருமை வளர்க்க கட்டாயம் மேய்ச்சல் நிலம் இருக்க வேண்டும். அவை காலாற சுற்றி வந்து மேய்ந்து, வயிறு நிறைய சாப்பிட்டால் தான் நன்கு வளரும். காலையில் தண்ணீர் காட்டி மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். வெள்ளாடு, பசுக்களைப் போல் இல்லாமல், ஒரே இடத்தில் நின்று கொண்டே செடிகளைச் சாப்பிடும். அந்த இடத்தில் தீர்ந்தால்தான் அடுத்த இடத்துக்குப் போகும். காலை பத்து மணியளவில் ஏதாவது குளம், குட்டையில் கொஞ்ச நேரம் இருக்க விட வேண்டும். குளங்களில் தண்ணீர் இல்லாத சமயங்களில் பம்பு செட் மூலமாவது தண்ணீர் பாய்ச்சி எருமைகளைக் குளுமைப் படுத்த வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது இப்படிச் செய்ய வேண்டும். அதிக வெயிலில் எருமைகளைக் கட்டிப் போடக் கூடாது. உச்சி வெயில் நேரங்களில் தானாகவே அவையெல்லாம் நிழலைத் தேடிப் போய் விடும்.
கொட்டகையெல்லாம் தேவையில்லை!

மதியம் மூன்று மணி வாக்கில் பால் கறந்துவிட்டு, மீண்டும் தண்ணீர் காட்டி மேயவிட வேண்டும். சாயங்காலம் ஆறு மணி சுமாருக்கு அழைத்து வந்து மீண்டும் தண்ணீர் காட்டி கட்டி வைத்தால் போதும். இதற்காக தனிக் கொட்டகையெல்லாம் அமைக்க வேண்டியதில்லை. ஏதாவது மர நிழலில் கட்டி வைத்தால் போதும் மழையோ, பனியோ எதுவாக இருந்தாலும் எருமைக்கு எந்த பாதிப்பும் வராது. மழையில் நனைந்தால் பாலின் அளவு கூடும். இரவில் வைக்கோலைத் தீவனமாகக் கொடுக்கலாம். காலையில் மூன்று மணிவாக்கில் பால் கறந்து விடலாம்.
சினை மாட்டுக்கும், பால் கறக்கும் மாட்டுக்கும் தண்ணீர்த் தொட்டியில், கம்பு மாவு, சோளமாவு, புண்ணாக்கு, தவிடு ஆகியவற்றை அதிகமாகக் கலந்துவிட வேண்டும். அதன் மூலம் தான் எருமை நன்கு பளபளப்பாகும், பாலின் அளவும் கூடும். பால் கறப்பதை நிறுத்தும் நிலையில் இருக்கும் மாட்டுக்கு மேற்கண்ட தீவன அளவுகளைக் குறைத்துக் கொள்ளலாம்.

பருவம் சொல்லும் பல்!

எருமைகள் இரண்டு பல் முளைத்த பிறகுதான் பருவத்துக்கு வரும். சினைப் பருவத்திற்கு வந்த எருமைகள், கீழ் வரிசைப் பல்லைக் காட்டி கத்தும். விட்டு விட்டு சிறுநீர் கழிக்கும். இதை வைத்துக் கண்டுபிடிப்பது சிறிது சிரமம் என்பதால் கூடவே ஒரு பொலி எருமைக் கிடாவையும் வளர்த்தால் அது பருவத்துக்கு வந்த எருமைகளை விரட்டும். அதை வைத்து எளிதாகக் கண்டுபிடித்து விடலாம். அதன் பிறகு நேரடியாகவோ, செயற்கை முறையிலோ கருவூட்டல் செய்து கொள்ளலாம். கன்று போட்ட மூன்று நான்கு மாதங்களுக்குப் பிறகு தான் மீண்டும் எருமைகள் பருவத்துக்கு வரும்.
எருமையின் கீழ் உதட்டைப் பிரித்துத் தெரியும் பற்களை வைத்து வயதைக் கணக்கிடலாம்
2 பல்
2 முதல் 3 வயது
4 பல்
3 முதல் 4 வயது
6 பல்
4 முதல் 5 வயது
8 பல்
5 முதல் 6 வயது
பால் பற்கள் இருந்தால், 2 வயதுக்கும் குறைவானவை என்றும் பத்து பற்களுக்கு மேல் இருந்தால், அதிக வயதானவை என்றும் தெரிந்து கொள்ளலாம்.
எருக்கு இலை பழுப்பதேன்… எருமைக் கன்று சாவதேன்?

கன்றுகள் பிறந்ததிலிருந்து நாற்பது நாட்கள் வரை வயிறாரப் பால் குடிக்க அனுமதிக்க வேண்டும். இல்லாவிட்டால் கன்றுகள் இறந்து போக வாய்ப்பிருக்கிறது. இதை மனதில் வைத்து தான் கிராமங்களில் ‘எருக்கலை பழுப்பதேன்? எருமைக் கன்று சாவதேன்,’ என்று ஒரு விடுகதை போடுவார்கள். அதன் விடை ‘பால் இல்லாமல்’ என்பதாகும்.
பிறந்த அன்றே கன்றுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். கன்றுப் பருவத்தில் முடியை மழித்துவிட வேண்டும். இல்லையென்றால் பேன் பிடித்து அரிப்பெடுக்கும். அரிப்பெடுத்த இடத்தை நக்கும்போது முடி வயிற்றுக்குள் சென்று விடும். இதைச் சரியாகக் கடைபிடித்து விட்டால், கன்றுகளை இறப்பிலிருந்து தடுத்து விடலாம்.

தடுப்பூசிகள் அவசியம்!

எருமைக்குப் பெரும்பாலும் அதிகமாகக் காணை நோய்தான் வரும். காணை தாக்கினால் வாயிலும், கால் குளம்பிலும் புண் வந்து, எச்சில் ஒழுகும். தடுப்பூசி மூலம் காணை நோயைத் தவிர்க்கலாம். பால் முழுவதையும் கறந்தாலோ, அல்லது கன்று குடித்தாலோ மடி நோய் வரும். அதேபோல் பால் கறப்பவர்கள் கைகளில் நகம் இருக்கக்கூடாது. சுத்தமாகக் கழுவுியபின் தான் கறக்க வேண்டும். சுண்ணாம்புச் சத்து குறைவு காரணமாக சமயங்களில் மாடு படுத்துக் கொண்டே இருக்கும். அதுமாதிரியான சமயங்களில் தெளிந்த சுண்ணாம்பு நீரைக் குடி நீரோடு கலந்து கொடுக்க வேண்டும். தடுப்பூசிகளையும் தவறாமல் போட்டுவிட வேண்டும்.

ஒரு நாளைக்கு 10 லிட்டர்!

கன்று போட்டதிலிருந்து மூன்று மாதம் வரைக்கும் ஒரு நாளைக்கு ஒரு எருமை அதிகபட்சம் 10 லிட்டர் பால் கொடுக்கும். அடுத்த இரண்டு மாதம் 3 லிட்டராகும். அடுத்த 3 மாதம் 5 லிட்டர் ஆகும். பாலின் அளவில் இப்படி ஏற்ற இறக்கம் இருக்கும். அதன் பிறகு பால் வத்திவிடும். பசுந்தீவனம் நிறைய சாப்பிட்டா, பால் கூடும். கோடையில் கொஞ்சம் குறைவாகத்தான் பால் கறக்கும். டீக்கடை, மற்றும் வெளியில் நேரடியாக பால் விற்றால் லிட்டருக்கு 16 ரூபாய் தான் கிடைக்கிறது. எருமைப்பால் கொழுப்பு அதிகமாக, கெட்டியாக இறுப்பதால் தான் நல்ல விலை கிடைக்கிறது.
“எருமையைப் பொறுத்தவரைக்கும் பராமரிப்புக்காக மிகவும் குறைந்தபட்சம் விஷயங்களை எல்லாம் முறைப்படி பராமரிப்போமானால் எருமை மூலமாகவே போதுமான லாபம் பெறலாம்”.
சினையான கன்றுக்குட்டிக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை விலை கிடைக்கும். என்னிடம் இருக்கின்ற மாடுகளில் எட்டு மாடு இப்ப கறந்துகொண்டிருக்கிறது. சராசரியாக ஒரு நாளைக்கு 50 லிட்டர் பால் மூலமாக, மாதத்திற்கு செலவு போக 14,000 ரூபாய் கிடைக்கிறது. கறவைக் கூலியாக 2000 ரூபாயும், சாணி மூலமாக 3000 ரூபாயும் கிடைக்கிறது. மொத்தம் மாதத்திற்கு 17,000 ரூபாய் லாபமாக கிடைக்கிறது.

தொடர்புக்கு:
திரு. கருப்பையா,
வடமலைராஜபுரம்,
சங்கராபுரம் அருகில்,
தேனி மாவட்டம்.
அலைபேசி: 98437 - 27958

No comments:

Post a Comment

மனிதன் தனது சிந்தனைகளை மாற்றியமைப்பதன் மூலம் தன் வாழ்க்கையையே மாற்றிவிடமுடிவும்

CAREER JET JOB SEARCH

Jobs by Careerjet
Related Posts Plugin for WordPress, Blogger...