நீங்கள் நன்மையிலும்,இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்- உலகப்பொதுமறை - திருக்குர்ஆன்.
வெற்றி என்பது உன்னை உலகத்திற்கு அறிமுகம் செய்வது.... தோல்வி என்பது உன்னை உனக்கே அறிமுகம் செய்வது !!!

Website Translator

Saturday, February 4, 2012

ஜோரான வருமானம் தரும், ஜோடிப் புறா!


தீவனச் செலவு, பராமரிப்பு இல்லை.குஞ்சுப் புறாக்களுக்குத்தான் கிராக்கி ,பொழுது போக்குடன் கூடிய வருமானம்.

விவசாயம் வில்லங்கமாகும் போது, விவசாயிகளுக்குக் கைகொடுத்து கரை சேர்ப்பது.. கால்நடை வளர்ப்புத்தான். ஆனால், அதிலும் முதலீடு, நோய்த் தாக்குதல், தீவனச் செலவு என சிக்கல்கள் இல்லாமல் இல்லை. ஆனால், மிகக்குறைந்த முதலீடு, தீவனச் செலவு, நோய்த் தாக்குதல் என எந்தச் சிக்கலும் இல்லாமல்.. பொழுதுபோக்குடன், வருமானத்திற்கும் வழிவகை செய்கிறது புறா வளர்ப்பு!
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகிலுள்ள குஞ்சாம்பாளையம், சீதாபாரதி, பல ஆண்டுகளாக புறா வளர்ப்பில் ஈடுபட்டு வருபவர். அவரிடம் இதைப் பற்றிக் கேட்ட போது.. கண்களில் உற்சாகம் படபடக்கப் பேசத் தொடங்கினார்.

“எங்களுக்குனு இருக்கிற ஒரு ஏக்கர் நிலத்தில், மாட்டுக்குத் தேவையான பயிர், பச்சையை மட்டும் விதைப்போம். மத்தப்படி விவசாயத்துல பெரிதாக வருமானம் இல்லை. ரொம்ப வருடமாக நாங்க செய்துகிட்டு வர்ற புறா வளர்ப்புதான் ஓரளவு கைக்கொடுக்குது. ஆரம்பத்தில் பொழுதுபோக்கா பழைய பெட்டியில் இரண்டு ஜோடியை விட்டு வளர்த்தோம். அது இன்றைக்கு ஒரு தொழிலா வளர்ந்து நிற்கிறது” என்ற சீதாபாரதி, புறா வளர்ப்பு தொடர்பான அனைத்து விஷயங்களையும் விவரித்தார்.
‘கோழி, முயல், காடை வளர்ப்பில் வருமானம் அதிகம். என்றாலும், அதற்கு ஏற்ப கொட்டகை, மின்சாரம், தண்ணீர், தீவனம் என செலவுகளும் அதிகமாகிக் கொண்டே இருக்கும். அதே போல ஒவ்வொரு சீசனுக்கும் ஏதாவது ஒரு நோய் தாக்குதல் இருக்கும். ஆனால், புறா வளர்ப்பில் இது போன்ற எந்தத் தொல்லைகளும் இல்லை. புறாக்கள் தங்குவதற்கு மட்டும் ஒரு கூண்டு ஏற்பாடு செய்தால், போதும். மற்றபடி, எந்தத் தொல்லையும் வைக்காமல் அவை வெளியே சென்று இரையைத் தேடிக்கொண்டு, திரும்பிவிடும்.

தீவனச் செலவே இல்லை!

சிறிய அளவில் நான்க அல்லது ஐந்து ஜொடிகளை மட்டும் வளர்க்க நினைப்பவர்கள், பழையப் பெட்டிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். குறைந்தது 50 ஜோடிகளை வளர்க்க நினைப்பவர்கள் 10 அடி நீளம், 6 அடி அகலம், ஆறடி உயரத்தில் ஓர் அறையைக் கட்டிக்கொள்ள வேண்டும். சுக்கான் அல்லது செம்மண்ணைக் குழைத்துதான் எழுப்ப வேண்டும்.

மண்ணைக் குழைத்து சுவர் எழுப்பும் போது, இடையில் செங்கல் அல்லது கருங்கல் வைப்பதற்கு பதிலாக மண்பானைகளை நெருக்கமாக வைத்து கட்ட வேண்டும். இந்தப் பானைகளின் வாய்ப்பகுதி, அறைக்கு உள்பக்கமாக இருக்க வேண்டும். இதில்தான் புறாக்கள் வசிக்கும்.
வாசலுக்கான இடைவெளியைத் தவிர, வேறு எந்தப் பக்கமும் இடைவெளி இல்லாமல் வெளிப்புறச் சுவற்றை சிமெண்ட் வைத்து வழவழப்பாக பூசிவிட வேண்டும். வெளிச்சுவர் வழவழப்பாக இருந்தால்தான் விஷப்பூச்சிகள் சுற்றின் மீது ஏறி அறைக்குள் வராது. அதே போல அறையின் கீழ்பகுதிகளிலும், விஷப்பூச்சிகள் நுழையாதவாறு இடைவெளி இல்லாமல் அடைத்து விட வேண்டும்.

இரை தேடி, வெளியே போய் வருவதற்கு வசதியாக. சுவற்றில் ஐந்தரை அடி உயரத்தில், வீடுகளில் வெண்டிலெட்டர் வைப்பதைப் போல, சிறியதாக சதுர வடிவில் இரண்டு பக்கமும் இடைவெளி விட வேண்டும். கூரைக்கு ஓலை, தகரம், கான்கிரீட் என வசதிக்கேற்ப அமைத்துக் கொள்ளலாம்.
புறாக்களை அறைக்குள் விட்டுவிட்டால், ஜோடிஜோடியாக பானைகளுக்குள் சென்று அடைந்து கொள்ளும். மழைக் காலத்தில் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்படும் போது, மட்டும் கம்பு, சோளம் போன்றவற்றைக் கொடுக்க வேண்டும். பருவம் வந்தவுடன் பெண் புறா முட்டையிடும். ஒரு பெண்புறா, இரண்டு முட்டையிட்டவுடன் அடைக்கு உட்கார்ந்து விடும். அருகிலுள்ள மற்றொரு பானையில் ஆண் புறா வசிக்கும்.

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம், முட்டையைக் கையால் தொடக் கூடாது, அப்படி தொட்டால் அந்த முட்டை பொறிக்காது. அடை உட்கார்ந்த 28 நாட்களில் குஞ்சு பொறிக்கும். 15 நாட்களில் தாயிடமிருந்து குஞ்சுகளை தனியாகப் பிரித்து விட வேண்டும். அப்போது தான், அடுத்த முப்பது நாட்களில் மறுபடியும் தாய்ப்புறா முட்டை போடத் தொடங்கும். ஒரு பெண்புறா மூலமாக ஓராண்டுக்கு குறைந்தது 10 குஞ்சுகள் வரை கிடைக்கும்.

ஆண்டுக்கு ரூ 50 ஆயிரம்!

வியாபார ரீதியா புறா வளர்க்க நினைப்பவர்கள், குஞ்சு பொறித்த 15 –ம் நாளில் குஞ்சுகளைப் பிரித்து, தனியாக வைத்து தீவனம் கொடுத்து வளர்த்தால்.. கூடுதல் எடை கிடைக்கும். புறா வளர்ப்பைப் பொறுத்தவரை இளம் குஞ்சுகளுக்குத்தான் கிராக்கி. 25 நாள் வயதுள்ள குஞ்சுகள் ஒரு ஜோடி 100 ரூபாய் வரை விற்பனையாகிறது. இளம் குஞ்சுகளை மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள்.
இளம் குஞ்சுகளின் ரத்தத்தை மூட்டுவலி உள்ள இடத்தில் தடவினால், வலி குணமாகிவிடும் என்று அதற்காகவும் குஞ்சுகளை வாங்கிச் செல்கிறார்கள். அதே போல குஞ்சுகளில்தான் கறி அதிகமாக இருக்கும். பெரிய புறாவில் எலும்பு மட்டும் தான் இருக்கும். 25 நாள் வயதுள்ள குஞ்சு 300 முதல் 400 கிராம் எடை இருக்கும். குஞ்சுகளின் கறியை பக்கவாதம், மூலம் மாதிரியான நோய்களுக்கு மருந்தாக சிபாரிசு செய்கிறார்கள். பெரிய புறா ஜோடி 60 ரூபாய்க்குதான் விற்பனையாகும்.

ஒரு குஞ்சு 100 ரூபாய் வீதம் விற்பனை ஆனாலே .. ஒரு ஜோடிப் புறா மூலமாக ஆண்டுக்கு 1,000 ரூபாய் கிடைக்கும். 50 ஜோடிகள் இருந்தால், அதன் மூலமாக 50 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கும். முதலீட்டைப் பொறுத்தவரை அறை கட்டுவதற்கு அதிகபட்சம் ரூ பத்தாயிரம்

தொடர்புக்கு:
சீதாபாரதி
அலைபேசி :98427-67355

.tnau.ac.in

1 comment:

மனிதன் தனது சிந்தனைகளை மாற்றியமைப்பதன் மூலம் தன் வாழ்க்கையையே மாற்றிவிடமுடிவும்

CAREER JET JOB SEARCH

Jobs by Careerjet
Related Posts Plugin for WordPress, Blogger...